சோபகிருது – ஆடி- ஸ்த்ரீ தர்மம்


மாதவிடாய் காலத்தில் ஸ்த்ரீகள் விலகி இருப்பதின் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? இன்று இருக்கும் வசதிகள் அன்று இல்லை. நாம் ஏன் தொடர வேண்டும். எனது அகத்தில் இருக்கும் ஸ்த்ரீகள் இதை விரிவாக அறிந்து கொண்டு தொடர விளக்குமாறு ப்ரார்த்திக்கின்றேன்.

Vidwan’s reply:

மாதவிடாய் காலத்தில் ஶரீர ரீதியில் ஒரு நிம்மதியின்மை, கஷ்டங்கள், மனதளவிலும் துக்கங்கள், வேதனைகள் இருக்கின்றபடியினால் ஒரு ஓய்வு கொடுப்பதற்காக விலகி இருப்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் முன்புபோல் அத்தகைய வேலைப்பளு கிடையாது என்பது வாஸ்தவம் தான். இப்பொழுது போல் முன்பு இத்தனை கருவிகள் கிடையாது. அதனால் வேலைப்பளு அதிகமாக இருந்ததனால் ஓய்வு தேவையாக இருந்தது. இப்பொழுதும் அலுவலகத்திற்கு வேலைக்கு, மற்றும் வெளியில் செல்வது போன்ற காரியங்களை எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதையெல்லாம்‌ யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

அகத்துக்குள் வரும்பொழுது அந்த ஓய்வை கடைபிடிப்பது மாத்திரம் அல்லாமல், மனதளவிலும், உடலளவிலும் ஒரு அசுத்தி இருக்கின்றது. சிலருக்கு மனதளவிலும் ஒரு பாதிப்பு அதாவது எதிர்மறையான எண்ணங்கள் இவை எல்லாம் இருக்கும். நம் அகம் என்பது பெருமாள் ஏளியிருக்கும் இடம், பெருமாள் திருவாராதனம் நடக்கும் இடம், எம்பெருமானுக்குத் தளிகை பண்ணும் இடம், சாப்பிடும் இடம் என்று எல்லாமே பெருமாளுடன் சம்பந்தப்பட்டதாக வைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தானே நித்யமும் வாசல்தெளித்து கோலம் போடுவது எல்லாம் செய்கின்றோம். அதனால் பெருமாளவில் சம்பந்தப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லி இருக்கிறார்கள்.பெருமாள் இருக்கும் இடம் சுத்தியாக இருக்க வேண்டும் என்று ஒரு சுத்திக்காகவும் மற்றும் ஓய்வுக்காகவும் இரண்டிற்காகவும் சொல்லி இருக்கிறார்கள்.


மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் சுமங்கலிப் பெண்கள் சாதாரமான நூல் புடவை 9 கஜம் தான் உடுத்திக் கொள்ள வேண்டுமா? அல்லது பட்டு ஜரி வைத்த புடவை அல்லது கல்யாணி காட்டன் புடவைகள் உடுத்தலாமா? 6 கஜ புடவையை 9 கஜமாக உடுத்திக் கொள்ளலாமா?

Vidwan’s reply:

மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் கர்தாவினுடைய பாரியாள் முதல்நாள் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு உலர்த்திய சுத்தமான வஸ்திரத்தைதான் கட்டாயம் தரித்துக்கொள்ளவேண்டும். மேலும் 6 கஜத்தை 9 ஆக உடுத்திக்கொள்ளும் வழக்கமில்லை. 9 கஜத்தைத்தான் உடுத்திக்கொள்ளவேண்டும்.

குறிப்புகள்:

மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் பொதுவாகப் பட்டு உடுத்திக்கொள்ளும் வழக்கம் கிடையாது. ஏனென்றால் சில பட்டுப்புடவைகளில் ஜரிகையெல்லாம் இருக்கும் அது நல்ல ஜரியாக இருக்காது. சாதாரண ஜரிகையாக இருந்தால் அவை உள்பாத்திரங்கள் மேல் படக்கூடாது. நூல் புடவைக்கு இந்தத் தோஷம் கிடையாது. ஆகையால் பொதுவாக நூல் புடவையையே உடுத்திக்கொள்கிறார்கள்.

சில க்ருஹங்களில் மாஸிகம், ஶ்ராத்தம், அமாவாஸை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொள்ளும் வழக்கமுண்டு. அந்தப் புடவையையும் முதல் நாள் சூர்யாஸ்தமனத்திற்குப் பிறகு நனைத்து உலர்த்தி உடுத்திக்கொள்வார்கள்.

ஆகையால் அவரவர் அகத்து வழக்கத்தைப் பின்பற்றவும்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top