ப்லவ – தை – ஸ்த்ரீ தர்மம்


உடல் நிலை காரணமாக ரஜஸ்வலை காலம் நீடித்தால் என்னென்ன ஆசாரத்தை பின்பற்ற வேண்டும்.

Vidwan’s reply:
சாஸ்த்ரப்படி ஐந்தாம் நாள் அந்யா தீட்டு ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே வந்து காரியங்கள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் மனசு ஆப்யாயத்திற்கு எது உசிதமோ அப்படிச் செய்வதில் ஒன்றும் தவறு இல்லை.

உதாஹரணத்திற்கு பெருமாள் சன்னதியை சுத்தி செய்வது, கோலம் போடுவது, விளக்கேற்றி வைப்பது இதையெல்லாம் செய்வதற்கு மனது ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அந்த காரியங்களைச் செய்வதற்கு வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் விண்ணப்பித்துக்கொண்டு செய்யச் சொல்லலாம். அதில் ஒன்றும் பாதகமில்லை.

15 நாள் வரை சாஸ்த்ரப்படி அவர்கள் விலகி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் 15 நாட்களுக்கு மேல் இருக்கிறது என்றால் 18 நாட்கள் வரை விழுப்பு போன்று கணக்கு. 18 நாட்களுக்கு மேல் மூன்று நாட்கள் மறுபடியும் விலகி இருக்க வேண்டும். சாஸ்த்ரப்படி இதுதான் வழக்கம்.

அதற்கு மேல் அவரவர்களுடைய குடும்ப சூழ்நிலை, ஒத்தாசைக்கு யாரேனும் இருக்கிறார்களா, இவற்றை எல்லாம் பொருத்து அவரவர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.


மஞ்சள் சரடிற்கு பதிலாக தங்கச் சங்கிலியில் திருமாங்கல்யம் அணிவது பரிந்துரைக்கப்படுகிறதா? இப்போது சமீபத்தில் திருமணமான பெண்கள் அப்படி அணிவதையே விரும்புகின்றனர். இதை தயவு செய்து விளக்க ப்ரார்த்திக்கிறேன். இளம் பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தாய்மார்களுக்கும் கூட அவ்வாறே அணிவதை காணமுடிகிறது.

Vidwan’s reply:
மஞ்சள் சரடு மிகவும் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. மாங்கல்ய சூத்திரம் என்று பெயர். “மாங்கல்ய தந்து” என்று கல்யாணங்களில் சொல்லும் ஸ்லோகங்களில் வரும். ஸ்வாமி தேஶிகனும் “மாங்கல்ய சூத்திரம் இவ” என்று சொல்லியிருக்கிறார்.

எப்படி மஞ்சள் சரடு மங்களகரமானது அதேபோல் ஸ்வர்ணமும் மிகவும் மங்களகரமானது தான். அதனால் சரடிற்கு பதிலாக ஸ்வர்ணம் ஏன் கூடாது என்று சமீப காலமாக கேள்வி எழுந்துள்ளது.

இது சாஸ்த்ரத்தில் சொல்லி இருக்கும் ஒரு ப்ராசீனமான பழக்கம். அதனால் அதை நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. எப்படி புருஷர்களுக்கு யக்ஞோபவீதமோ கிட்ட தட்ட அதே போல் ஸ்த்ரீகளுக்கு மாங்கல்ய சூத்திரம், பிப்ரதி என்று ஸ்வாமி தேஶிகனும் கூறியுள்ளார். இதை எப்போதுமே தரித்திருக்க வேண்டும். அதனால் அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனத் தோன்றுகிறது.


அடியேன், ஸ்த்ரீகள் ஆளவந்தாருடைய ஜிதந்தே ஸ்தோத்ரம் சேவிக்கலாமா?

Vidwan’s reply:
ஆளவந்தார் பண்ண ஸ்தோத்ரத்திற்கு “ஸ்தோத்ர ரத்னம்” என்று பெயர். ஜிதந்தே ஸ்தோத்ரம் அவர் பண்ணியது இல்லை. ஆளவந்தாருடைய ஸ்தோத்ரங்களை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஜிதந்தே ஸ்தோத்ரம் வேத புராணங்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அதனால் அதில் சில நியமனங்கள் இருக்கலாம். ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் போல் அதுவும் ஸ்தோத்ரம் தானே என்று சிலர் சொல்வதுண்டு. சாஸ்த்ரங்களின் படி நியமமாக கடைபிடிக்கும் போது ஸ்த்ரீகள் இதைச் சொல்லக்கூடாது.


அடியேன் ஆத்து விக்ரஹங்களை ஸ்த்ரீகள் தொட்டு சுத்தி செய்யலாமா? புது வஸ்த்ரங்கள் அணிவிக்கலாமா?

Vidwan’s reply:
ஆத்து விக்ரஹங்களில் இரண்டு விதம் உண்டு. ப்ரதிஷ்டை ஆன விக்ரஹம். ப்ரதிஷ்டை ஆகாத விக்ரஹம்.

ப்ரதிஷ்டை ஆன விக்ரஹத்தை ஸ்த்ரீகள் தொடக்கூடாது. புருஷர்களும் ரொம்ப நியமத்துடன் தொட வேண்டும்.

வெளியில் போய் விட்டு வந்த தீட்டுடன் தொடக்கூடாது. சாப்பிடாமல் தொடவேண்டும். காலையில் சுத்தமாக ஸ்நானம் செய்து சந்தியாவந்தனம் பண்ணி சாப்பிடாமல் தொடவேண்டும் என்று நியமனங்கள் உண்டு.

ப்ரதிஷ்டை ஆகாத விக்ரஹங்களாக இருந்தால் அவற்றை யார் வேண்டுமானாலும் திருமஞ்சனமோ, புது வஸ்த்ரங்கள் அணிவித்து அலங்காரமோ பண்ணலாம்.


மஹாளய பக்ஷத்தில் சுமங்கலிப் பெண்கள் வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டுமா?

Vidwan’s reply:
மஹாளய பக்ஷத்தில் சுமங்கலிகள் ப்ரத்யேகமாக அநுஷ்டிக்க வேண்டிய வ்ரதம் எதுவும் கிடையாது. அந்த க்ருஹத்தில் மகாளய தர்ப்பணம் யாராவது பெரியோர்கள் பண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு சகாயம் பண்ண வேண்டும். மஹாளயம் என்பது ஶ்ராத்தம் என்கின்றபடியினால் அப்படி சகாயம் பண்ணும் தினத்தில் ஶ்ராத்தத்திற்கு எப்படி சுத்தியோடு இருப்போமோ அப்படி இருக்க வேண்டும்.


த்வய மந்த்ர உபதேசத்தின் போது ஸ்த்ரீகள், ப்ரணவத்திற்கு பதிலாக உம் என்று உச்சரிக்க வேண்டும் என்று உபதேசிக்கப்பட்டேன். பல இடங்களில் ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து தெளிவுபடுத்த ப்ரார்த்திக்கிறேன்.

Vidwan’s reply:
ப்ரணவம் மந்திரத்தில் இருந்தால் ஸ்த்ரீகள் சொல்லுவதில்லை என்று நியமனம் சாஸ்த்ரத்தில் வைத்துள்ளார்கள்.

ஸஹஸ்ரநாமத்தில் ப்ரணவம் நடுவில் அதாவது ஆயிரம் நாமாவில் கிடையாது. சில இடங்களில் சேர்த்துச் சொல்கிறார்கள் அது நாமே சேர்த்து சொல்வது என்பது மட்டும் தான். ஆகையால் அப்படிச் சொல்ல வேண்டுமென்ற நிர்பந்தமில்லை சொல்லாமலும் இருக்கலாம்.

Loading

2 thoughts on “ப்லவ – தை – ஸ்த்ரீ தர்மம்”

  1. ரங்கராஜன்

    தாயாதிகள் குழி தர்ப்பணம் செய்யவிட்டால் என்ன தவறு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top