சோபகிருது – சித்திரை – வைகாசி – ஸ்த்ரீ தர்மம்


நம் ஸம்ப்ரதாயத்தில் ஜபம் செய்யும்போது துளசி, வேப்ப அல்லது தாமரை மாலைகளை ஸ்த்ரீகள் மற்றும் புருஷர்கள் ஏன் உபயோகிப்பதில்லை? ஸ்த்ரீகள் ஜபம் செய்ய என்ன மாலையைப் பயன்படுத்தவேண்டும்?

Vidwan’s reply:

இக்கேள்விக்கு ஸ்த்ரீ தர்ம ரீதியாக மட்டும் இங்கே பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஸ்த்ரீகள் ஜபம் செய்ய மாலை தேவையில்லை. கை விரலின் எண்ணிக்கை வைத்துக்கொண்டே சுலபமாக ஜபம் செய்யலாம்.

ஜபம் செய்யும் முறையை பொதுவாக மந்திரோபதேசம் ஆகும் போதே ஆசார்யன் சொல்லிக்கொடுத்திருப்பார். கட்டைவிரலை விட்டு மீதி நான்கு விரல்களைக்கொண்டு ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கை செய்தால் 10 வரை எண்ணிக்கைகள் வரும். அதாவது ஆள்காட்டி விரலுடைய கீழ்ப்பகுதியில் ஆரம்பித்து வரிசையாக ப்ரதக்ஷிணமாக எண்ணிக்கொண்டுப்போனால் நடுவிரலின் கடைசிபாகத்தில் (கீழே) 10 என்ற எண்ணிக்கையில் முடியும். இப்படியாக 10 என்ற கணக்கில் பண்ணலாம். மானசீகமாக எத்தனைப் பத்து என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஜபிக்கலாம். ஸ்த்ரீகள் பொதுவாக 108க்கு மேல் ஜபிப்பது என்பது ஏற்பட்டதில்லை. ஆகையால் கையாலே சுலபமாக எண்ணிக்கொண்டு பண்ணிவிடலாம். நம் பெரியவர்களும் அப்படியே பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.


ரஜஸ்வலை காலம் முடிந்த நான்காம் நாள் சில க்ருஹங்களில் அரிசி மற்றும் உப்பு / புளி மற்றும் உப்பு எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. இதற்குப் பின்னால் ஏதேனும் விஞ்ஞான ரிதீயாக காரணம் இருக்கிறதா என்று விளக்கவேண்டுகிறேன்.

Vidwan’s reply:

ரஜஸ்வலை காலம் முடிந்த நான்காம் நாள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டுதான் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற வழக்கம் உலகத்தில் இருக்கிறது. இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் காரணம் இருக்கின்றது. பொதுவாக நான்காவது நாள் ஸ்நானம் செய்த அன்று ஸ்த்ரீகளுக்கு துணியை எல்லாம் நனைத்து உலர்த்தி என்று நிறைய காரியங்கள் இருக்கும். அந்தக் காரியங்களில் ஈடுபட்டு வயிற்றைப் பட்டினிபோட்டு விடக்கூடாது. ஏனென்றால் அந்தச் சமயத்தில் acidity நிறைய இருக்கும். அதனால் அது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஒரு ஸம்ப்ரதாயமாக ஏதாவது ஒன்றை சாப்பிட்டுவிட்டு, அதன் பின்னே உள்ளே செல்லவேண்டும் என்ற வழக்கம் இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் கருத்து.

ஆனால் ஒரு வசதிக்காக உப்பு மற்றும் அரிசி சாப்பிடுவது என்ற ஒரு வழக்கம் ஏற்பட்டு விட்டது. அதாவது உப்பான ஏதாவது ஒரு பதார்த்தம் சாப்பிட்டுவிட்டு மேலே வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் கருத்து. உப்பான பதார்த்தத்தைத் தளிகை பண்ணிச் சாப்பிடுவது என்பது காலை வேளையில் சிரமமாக இருக்கலாம். வேறு ஒருவர் பண்ணிக்கொடுத்து சாப்பிடும் படியாக இருந்திருக்கும். ஆனால் நடைமுறை வழக்கத்தில் கஷ்டமாக இருந்திருக்கலாம். அதனால் பச்சைப் பதார்த்தங்களான உப்பு மற்றும் அரிசியை சாப்பிடுவது என்று வழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். உப்பு மற்றும் அரிசிதான் சாப்பிட வேண்டும், அல்லது அரிசி மற்றும் புளிதான் சாப்பிட வேண்டும் என்கின்றதில்லை. அதனால் எந்தப் பச்சை ஆஹாரமாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டுவிட்டு காரியங்களைப் பார்க்கலாம். இன்று விஞ்ஞான ரீதியாக நாம் புரிந்து கொள்ளலாம். ஸம்ப்ரதாய ரீதியாக உப்பு மற்றும் அரிசியை சௌக்கியமாக வாயில் போட்டுக் கொண்டு வேலைகளை ஆரம்பிக்கலாம் என்பதனால் ஒரு வழக்கம் ஏற்பட்டுள்ளது.


ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் வரும் அபாமார்ஜந ஸ்தோத்ரம் சேவிக்கலாமா?

Vidwan’s reply:

ஸ்த்ரீகள் ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் வரும் அபாமார்ஜந ஸ்தோத்ரம் சேவிப்பது பொதுவாக வழக்கத்தில் இல்லை. ஆனால் சில க்ருஹங்களில் பெரியோர்கள் சொல்லி அந்த வழக்கம் இருந்தால் அதைக் கடைபிடிக்கலாம்.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top