அடியேனுக்கும் அடியேனுடைய பார்யாளுக்கும் பர சமர்ப்பணம் ஆகிவிட்டது. அப்பொழுது ஸ்ரீமத் அழகிய சிங்கர் ஆசார்யன் தனியனைச் சேவிக்கச் சொல்லி உபதேசித்தார். பகவன் நாம ஜபம் செய்து, அவன் திருஉருவத்தை த்யானிப்பது சிறந்ததா? அல்லது ஆசார்யன் தனியனை சேவித்து ஆசார்யன் திருமேனியை தியானிப்பது சிறந்ததா? எது நம்மை விரைவில் பக்தி மார்க்கத்திற்கு இட்டுச் செல்லும்? மேலும் சந்த்யாவந்தன சமயத்தில் காயத்ரி ஜபம் செய்யும் போது ஆசார்யன் திருமேனியை த்யானிக்கலாமா?

ஆசார்யன் திருநாமத்தைச் சொல்வது அவர் திருமேனியை த்யானிப்பது இவை எல்லாம் மிகவும் உயர்ந்தது. மதுரகவியார் காண்பித்த பாதையின் படி தேவுமற்றறியேன் என்று ஆசார்யனையே நினைத்துக் கொண்டிருப்பது உயர்ந்தது தான். ஆனால் பெருமாளை த்யானம் பண்ண வேண்டும், திருமந்த்ரம் ஜபம் பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது. அந்த த்யானத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசார்யன்தான் உபதேசிக்கின்றார். அதனால் ஆசார்யன் உபதேசித்த பகவத் த்யானத்தைப் பண்ணினால் ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும். ஆசார்யன் திருவுள்ளம் உகக்க பகவத் தியானமோ, நாம சங்கீர்த்தனமோ, பண்ணினால் அது மிகவும் உசத்தி. அதை எப்படிச் சொல்லி இருக்கிறார்களோ அந்த ரீதியில் பண்ண வேண்டும். எல்லாமே ஆசார்யன் காண்பித்த வழி. அவராலே ஏற்பட்டது என்கின்ற க்ருதக்ஞதைகளோடு இருந்துகொண்டு பண்ணினோமேயானால் அது மிகவும் உசிதமாக இருக்கும். பகவான் த்யானத்தையே தவிர்க்கணும், பகவன் நாமாவையே சொல்ல வேண்டாம் என்பது இல்லை, பகவன் நாமாவை சொன்னால், பகவன் த்யானம் பண்ணினால் ஆசார்யன் திருவுள்ளம் உகக்கும் என்று நினைத்துக் கொண்டு பண்ணுவது உசத்தியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top