a. பாதுகைக்கு அம்சை பண்ண பதார்தத்தை உள் பாத்திரங்களோடு சேர்க்கக்கூடாது. அதாவது தளிகை பண்ணும் பாத்திரங்கள் உட்பட பெருமாள் பாத்திரங்கள் என்று சில பாத்திரங்கள், நாம் உபயோகிக்கும் பாத்திரங்கள் என்று தனித்தனியாக வைத்திருப்போம். அதே போல் பாதுகா பாத்திரங்கள் தனி. அந்தப் பாதுகைக்கு உபயோகப்படுத்திய பாத்திரங்கள், அவற்றிற்கு ஸமர்ப்பித்த புஷ்பம், பழங்கள் என எதுவுமே பெருமாளுக்கு இருக்கும் பாத்திரங்களில் சேர்க்கக்கூடாது. ஆகையால் கேசரி முதலியவற்றை ஸமர்ப்பித்தால் அவைகளை உள்ளே சேர்க்க முடியாது என்பதாலும், பாதுகாராதனம் சுலபமாகப் பண்ணவேண்டியது என்பதாக ஸம்ப்ரதாயத்தில் வசனங்கள் இருக்கிறதாலும் இருப்பதைச் செய்தால் போதுமானதாகும். கேசரி முதலியவை பண்ணால்தான் விசேஷம் என்பதல்ல, நம் ஸம்ப்ரதாயத்தில் கூறியிருக்கும்படிச் செய்வதே விசேஷமாகும்.
b. முடியுமானால் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரின் பாதுகைகளை ஏளப்பண்ணி ஆராதிக்கலாம். கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தமில்லை. பக்தியோடு செய்தாலே விசேஷமாகும்.
c. பெருமாளுடைய திருமணியை பாதுகைக்கு உபயோகப்படுத்துவது சரியில்லை. பாதுகாராதனத்திற்குத் தனியாக ப்ரதிஷ்டை ஆகாத திருமணியாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பாதுகைக்குத் திருமணி ஸமர்ப்பிக்கவேண்டும் என்ற நிரபந்தம் கிடையாது. ஸமர்ப்பித்தால் விசேஷம்.
d. நாம் ஏன் பாதுகா தீர்த்தத்தை முதலில் தெளித்துக்கொண்டு பின் ஸ்வீகரிக்கின்றோம் மற்றும் பெருமாள் தீர்த்தத்தை முதலில் ஸ்வீகரித்து விட்டு பின் தலையில் தெளித்துக் கொள்கின்றோம் என்றால் இரண்டும் வெவ்வேறு அதன் வித்யாசத்தைக் காட்டுவதற்காக இப்படி ஒரு வழக்கம். இரண்டு தீர்த்தமும் விசேஷம் தான்.
e. பெருமாளை நமக்குச் சேர்த்து வைக்கிறபடியினாலே ஆசார்யன் உயர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் பெருமாளைக் காட்டிலும் உயர்ந்தவர் என்ற அர்த்தமில்லை ஏனென்றால் அவர் பெருமாளுக்கு தாசர், மேலும் எம்பெருமான்தான் ஸர்வ பேருக்கும் ஸ்வாமி, அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் கிடையாது. ஆசார்யன் பெருமாளுக்கு ஸ்வாமி என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. நமக்கு அவர் பெருமாளையே சேர்த்து வைப்பதால் உயர்ந்தவர் என்று சொல்கிறோம். ஆசார்யன் எப்போதுமே எம்பெருமானுக்கு தாசர் ஆகையால் அவர் திருப்பாதுகைகளை பெருமாளுக்குக் கீழ்தான் ஏளப்பண்ணவேண்டும்.
துளசி என்பது பெருமாளுக்கு மட்டுமே உரியது அதை வேறு யாருக்கும் ஸமர்ப்பிக்கக்கூடாது. கால்களில் படக்கூடாது ஆகையால் பாதுகைக்கு ஸமர்ப்பிக்கக்கூடாது. அவர் நித்யஸூரி, பெருமாளுக்குச் சேவகம் பண்ணுபவர். நாம் அந்த நித்யஸூரிகளுக்கும் தாசர்களாவோம். ஆகையால் ஆசார்யனே ஆனாலும் அவருடைய திருவடிகளில் துளசி படக்கூடாது.
f. சூர்ய க்ரஹணத்தின்போது பாதுகைக்குத் திருமஞ்சனம் செய்யவேண்டிய அவசியமில்லை. க்ரஹணத்திற்குப் பிறகு செய்யலாம்.