ஒரு ஶ்ரீவைஷ்ணவனாக ஆழ்வார்காள் ஆசார்யர்கள் காட்டிக்கொடுத்தபடி ஶ்ரீமந் நாராயணனே பரதெய்வம் என்பதை முழுதும் ஒப்புக்கொள்கிறேன், சைவம், அத்வைதம்,ஸ்மார்த்த போன்ற பிற சம்ப்ரதாயங்களில் உள்ள ஆதி சங்கரர், சதாசிவ ப்ரம்மேந்திரர், அருண கிரி நாதர் போன்ற ஆசார்யர்களின் உபதேசங்களில் பல ஆழ்ந்த கருத்துக்களைக் காணமுடிகிறது. பலர் சிவன், முருகன், ஐயப்பன் போன்ற இதர தேவதாந்தரங்களையும் வழிபடுகின்றனர். அவர்கள் சொன்ன கருத்துக்களை நம் ஸம்ப்ரதாயத்தில் இருந்து கொண்டே நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? சின்மயா மிஷனின் காணொளிகளில் நிர்குண ப்ரமம், ஹரி-ஹர அபேதம், இருவரும் ஒருவர் என்பதெல்லாம் குறிப்பிடுகின்றனர். தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம், காலபைரவாஷ்டகம், சிவ மஹிம ஸ்தோத்ரம் , ருத்ரம் போன்ற ஶ்லோகங்களை நாம் எக்கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும்? ஸ்கந்த புராணத்தில் மஹாவிஷ்ணு தன் கண்ணைக் காணிக்கையாகக் கொடுத்து சிவனை அர்ச்சனை செய்தார் என்றிருக்கிறது, இவற்றையெல்லாம் நம் ஸம்ப்ரதாய விரோதமில்லாமல் எப்படி நோக்க வேண்டும்? அடியேன் இக்கேள்விகளை நம் ஸம்ப்ரதாயத்தில் உயர்ந்த நம்பிக்கையும் அதே சமயத்தில் இதர சம்ப்ரதாயங்களில் சனாதன தர்மம் என்ற கோணத்தில் மரியாதையோடு எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கேட்கிறேன்.

பிற மதங்களிலே பல விஷயங்களெல்லாம் சொல்லுவார்கள், அதெல்லாம் நல்ல விஷயங்களாக இருக்கும். ஆனால் அதே மாதிரி பெருமாளுக்கு ஏற்றார் போல் நல்ல விஷயங்கள் நம் மதத்தில் இருக்கிறபடியாலே இராமாயணம், மஹாபாரதம், ஶ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் போன்றவற்றைச் சேவித்து தெரிந்து கொள்ளலாம்.
நாம் இதர ஸம்ப்ரதாய தர்மங்களையோ அவர்களையோ பழிக்காமல் இருத்தல் வேண்டும். “தர்மஸ்ய ப்ரபு: அச்யுத:” என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகவானிடம் ஈடுபட்டிருப்பதுதான் பெரிய தர்மம், எதுவாக இருந்தாலும் ஶ்ரீமன் நாராயணாயிதி ஸமர்ப்பயாமி என்று சொல்லுவதுதான் பெரிய தர்மம். பகவானுக்கு சேஷனாக இருந்துகொண்டு தர்மம் பண்ணுவது விசேஷமானது. அது இல்லாத போது அந்த தர்மத்தில் ஒரு குறைவிருக்கும் என்கிறது மஹாபாரதம். அவர்களை நாம் நிந்திக்கவோ சண்டையிடவோ வேண்டாம். அவர்கள் ரீதியில் அவர்கள் நம் ஶ்ரீவைஷ்ணவ ரீதியில் நாம் என்று இராமாயண, மஹாபாரத, மனுஸ்ம்ருதி, புராணங்கள் மற்றும் ஸ்ம்ருதிகள் சொன்ன ரீதியில் நம் ஶ்ரீவைஷ்ணவ தர்மத்தைச் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top