இஜ்யா காலத்தில் திருவாராதனம் செய்ய வேண்டும் என்று ஆஹ்நிகம் தெரிவிக்கிறது. இஜ்யா காலம் என்பது மாத்யாஹ்நிகத்திற்குப் பிறகு வருகிறது. திருவாராதனம் செய்த பிறகே சாப்பிடலாம் என்றால் காலையில் எழுந்தது முதற்கொண்டு மதியம் வரை சாப்பிடக் கூடாதா. இடையில் அன்னமாக புஜிக்கக்கூடாது என்றால் பழம் பால் மற்றும் வேறு என்ன மாதிரியான பதார்த்தங்களை அல்லது தளிகையைச் சாப்பிடலாம். தற்காலத்தில் காலை உணவைச் சாப்பிடாமல் விடுவது மிகவும் தவறு என்று மருத்துவர்கள் தெரிவிப்பதால் தான் இந்தக் கேள்வி. மேலும் மாலை/இரவு வேளையில் தளிகை செய்யும்போது நடைமுறையில் அதை அப்படியே தான் சாப்பிடுகிறோம். பகவானுக்கு நிவேதனம் செய்யாமல் உண்ட குற்றம் அதற்கு ஏற்படுமா. மேலும், தொலைதூரப் பயணம் செய்யும் போது கையில் உணவோ அல்லது ரொட்டி முதலானவைகளையோ கொண்டு செல்ல அனுமதி உள்ளதா?

திருவாராதனத்திற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது.
மாத்யாஹ்நிக காலமென்பது காலை 10.30மணிகெல்லாம் வந்துவிடும். அந்த மாத்யாஹ்நிக காலத்தில் மாத்யாஹ்நிகம் பண்ணிவிட்டு இஜ்யாராதனம் பண்ணிவிடலாம். இவையெல்லாம் காலை சுமார் 11, 11.30 மணிக்குள் பண்ணிவிடலாம். இது முடியாதவர்கள் சற்றுமுன்னரே இஜ்யாராதனம் செய்துவிடலாம். சாப்பிட்டுவிட்டு இஜ்யை பண்ணுவதைக் காட்டிலும் ரொம்ப முடியவில்லை என்றால், காலை 7.30-8.00 மணிக்குள் எம்பெருமானுக்குப் பாலோ ,தயிரோ, பழமோ வைத்து இஜ்யை பண்ணிவிட்ட பிறகு மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அசக்தர்கள் முன்னமே பண்ணலாம், சக்தர்கள் காத்திருந்து காலை உணவை 11 மணிக்குள் சாப்பிட்டுவிடலாம்.
மாலை, இரவு வேளையிலும் பெருமாளுக்கு அமுது செய்வித்து உட்கொள்ளவேண்டும்.
தொலைதூரப் பயணம் போகுபவர்கள் கையில் எடுத்துக்கொண்டு போவதில் சில சங்கடங்கள் இருக்கின்றன அதனால் பொதுவாக அதற்கு அனுமதியில்லை. வேறுவழியில்லாவிட்டால் அசுத்தம் படாமல் ரொட்டி முதலாவைகளை மறைத்து (பாத்திரத்தில் இட்டு , சால்வையால் சுத்தி) எடுத்துக்கொண்டு போகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top