அடியேன் தாஸன். என்னுடைய கேள்வி அர்த்தமற்றதாக இருக்கலாம். க்ஷமிக்கணும். நாம் விசிஷ்டாத்வைதத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம், உஜ்ஜீவனத்திற்காக நாம் ப்ரபத்தி மார்கத்தைப் பின்பற்றி, விடுபட்ட ஆத்மாக்கள் நித்யவிபூதியில் எம்பெருமானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் பிராப்தத்தையும் பெரும் இந்த மேன்மையான சம்ப்ரதாயத்தின் ஒரு அங்கமாக இருப்பதையும் நாங்கள் பாக்யமாக கருதுகிறோம். ஆனால் பெருமாள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன (தானே தனித் தோன்றல்) மற்றும் இந்த அண்ட சராசரத்தை எதற்காக உருவாக்க வேண்டும் ? அவர் எந்த கர்மாவிற்கும் கட்டுப்படாதபோது இந்த சம்சாரத்தில் இருந்து நம்மை உயர்த்த எம்பெருமான் ஏன் இவ்வளவு முயற்சி எடுக்கின்றார்? அவர் ஏன் இருக்கிறார் மற்றும் இந்த பிரபஞ்சத்தை எதற்காக உருவாக்கினார்? தன்யாஸ்மி.

பெருமாள் ஏன் இருக்கிறார், இந்த பிரபஞ்சம் ஏன் இருக்கிறது என்கின்ற கேள்விகளுக்கு இடமேயில்லை. ஏனெனில், ஏதாவது புதிதாக உண்டானால் தானே இந்தக்கேள்வி வரும். பெருமாள் எப்பவுமே இருக்கின்றார் அதேபோல் இந்த ப்ரபஞ்சமும் அப்படியே இருக்கின்றது!
ஸ்ருஷ்டிக்கு முன், ப்ரளய காலத்தில் சூக்ஷ்ம ரூபத்தில் ப்ரபஞ்சம் இருந்திருக்கிறது. ஜீவராசிகளும் இருந்திருக்கின்றன. ப்ரளய காலத்தில் ஜீவர்கள் அனைத்தையும், அனுபவிப்பதற்காக பெருமாள் ஸ்ருஷ்டிக்கிறார். சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு தாய் நீண்ட நாழிகை தூங்கிக்கொண்டிருக்கும் தன் குழந்தையை எழுப்பி பால் கொடுப்பது போலே, ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுப்பதற்காக ஸ்ருஷ்டிக்கின்றார்.
இந்த ஸம்சாரத்தில் கஷ்டப்படுவதை காட்டிலும் ஸ்ரீவைகுண்ட லோகத்தைச் சேர்ந்துவிட்டால், பசி தாகமென ஒன்றும் இல்லாமல் இன்னும் நன்றாக ஆனந்தமாக இருக்கலாம். பெற்றோர்களுடன் இருப்பது போல் பெருமாளுடன் கூட இருக்கலாம். இதைப்புரிய வைப்பதற்காகத்தான் பெருமாள் தானே அவதாரமெடுத்து, தன் விஷயத்தைப் புரியவைத்து தன்னிடம் வரவழைத்துக்கொள்கிறார்.
பெற்றோர்கள் தன குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்து செய்வது போலே, பெருமாள் அவருடைய குழந்தைகளாகிய நம்மிடம் இருக்கும் வாத்ஸல்யத்தினால் இவ்வாறு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top