ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீகள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் எவை? மேலும் கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது எப்படிப் போகவேண்டும்? அதாவது எப்படி தலைவாரிக் கொள்ளவேண்டும், நெற்றி இட்டுக்கொள்ளவேண்டும், குங்குமம் வைத்துக்கொள்ளலாமா போன்றவற்றை விரிவாகத் தெளிவிக்க ப்ரார்த்திக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவர்கள் நித்யம் கடைபிடிக்க வேண்டிய ஆசாரங்கள் என்ன என்பதைப்பற்றி சுதர்சத்தினுடைய‌ முந்தைய பல இதழ்களைப் பார்த்து அறிந்துகொள்ளவும். குறிப்பாக ஸ்ரீவைஷ்ணவ ஸ்த்ரீ தினசர்யா என்ற காணொளியை SudaranamGSPK YouTube channelல் வெளியிட்டுள்ளோம் அதன் link இங்கே கொடுத்துள்ளோம்.
கோவில்களுக்கு அல்லது ஆசார்யனைச் சேவிக்க செல்லும்போது வெறும் கையுடன் போகக்கூடாது. நம்மால் என்ன முடியுமோ அந்த உபகாரத்தை அவசியம் எடுத்துக்கொண்டு போய் சமர்ப்பித்து சேவிக்கவேண்டும்.
நன்றாகத் தலையைவாரி முடிந்துகொண்டுதான் போகவேண்டும். கோவிலுக்குப் போகும் பொழுதும் ஆசார்யனை சேவிக்கப் போகும் பொழுதும் தலையை விரித்துவிட்டு கொள்ளக்கூடாது. நன்றாகத் தலையை முடிந்துகொண்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டுதான் போகவேண்டும்.
நெற்றிக்கு எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்றால் திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு போவது உசந்தகல்பம்.
குங்குமத்தைக் கரைத்து ஸ்ரீசூர்ணமாக இட்டுக்கொள்ளலாம் அல்லது ஸ்த்ரீகளுக்கு என்று கிடைக்கின்ற சிகப்பு ஸ்ரீசூர்ணம் அதையும் இட்டுக்கொள்ளலாம்.
திருமண் ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு வாரிமுடிந்த தலையுடன் போவது மிகவும் உசத்தியாக ஆகும். அவசியம் ஒரு உபகாரத்துடன் (என்ன முடிகிறதோ பழமோ புஷ்பமோ எதுவும் முடியவில்லையென்றால் இரண்டு காசையாவது எடுத்துக்கொண்டு) எம்பெருமானிடத்தில் ஸமர்ப்பிக்க வேண்டும்.
தயாஶதகத்தில் ஸ்வாமி தேஶிகன் சாதித்த மாதிரி ஏதும் இல்லையே ஸமர்பிப்பதற்கு என்று மிகுந்த ஆகிஞ்சன்யத்துடன் இருக்கும் சமயத்தில் போகும்பொழுது கூட ஸமர்ப்பிக்கவேண்டும் என்கின்ற எண்ணத்துடன் போக வேண்டும். எம்பெருமானே உனக்கு என் பாபத்தையே ஸமர்ப்பிக்கிறேன் என்று ஸ்வாமி தேஶிகன் சொல்கின்ற ஸ்ரீஸூக்திகளெல்லாம் இருக்கிறது.
அதைப்போல அவர்களுக்கு ஏதாவது ஸமர்ப்பிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்துடன் எவ்வளவு முடிகின்றதோ அந்த உபகாரத்துடன் போய்ச் சேவிக்கவேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top